சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1975ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச பெண்கள் தினம் அங்கீகரிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கொண்டாட்டத்திற்காக அன்றி, போராட்டத்தின் விளைவாகவே பெண்கள் தினம் உருவானது. வேலை நேரத்தை குறைக்கவும், ஊதிகத்தை அதிகரிக்கவும், வாக்களிக்க உரிமையை கோரியும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உழைக்கும் பெண்கள் 1908ம் ஆண்டு அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. இதனை சர்வதேச தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய 1910ம் ஆண்டு உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கமைய 1911ம் ஆண்டு சில ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மார்ச் 8ம் திகதி சர்வதேச பெண்கள் தினம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதற்கமைய இவ்வருடம் 108வது ஆண்டு பெண்கள் தினம் ‘நான் தலைமுறையின் சமத்துவம், பெண்களின் உரிமைகளை உணர்ந்துகொள்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
இதேவேளை இன்றைய உலகில் பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடி வருகின்றனர். குடும்பத்தின் வளத்திற்காக மாத்திமன்றி, நாட்டின் அபிவிருத்தியிலும் அதிக பங்களிப்பை செலுத்தும் பெண்களின் உழைப்பு போற்றப்படக்கூடியது. பல்வேறு துறைகளில் இன்று பெண்களின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.
ஆண்களுக்கு சமமாக பெண்களும் கடினமான துறைகளை தெரிவுசெய்து, தமது வெற்றியை பதிவுசெய்து வருகின்றனர். உலகில் சாதனை பெண்கள் பலர் இன்றைய மகளிருக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். பெண்களின் முன்னேற்றத்தை அங்கீகரித்து அதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நாடுகள் முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றன. இன்றைய பெண்கள் தினத்தில் அவர்களை போற்றுவது மாத்திரமன்றி, அவர்களுக்கு எதிராக காணப்படும் வன்முறைகளுக்கு பாலினம் பாராது அனைவரும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். இன்றைய நாளில் பெண்கள் தினத்தை கொண்டாடும் அனைத்து சாதனை பெண்களுக்கும் வாழ்த்துகிறது.