கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பதுளை அரச மருத்துவமனையின் விசேட சிகிச்சைப்பிரிவில் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய், தந்தை மற்றும் அவர்களது 7 வயது மகன் ஆகியோர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த 7 வயது நிரம்பிய சிறுவனுக்கு கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருப்பதான சந்தேகத்தின்பேரில் பெற்றோர் அவரை பதுளை அரச மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் சிறுவனின் தாயும், தந்தையும் விசேட சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்மூவரும் தென்கொரியாவிலிருந்து தமது சொந்த ஊரான பண்டாரவளை ஹம்பிட்டிய பகுதிக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த 27ம் திகதி இவர்கள் வருகைத்தந்த நிலையிலேயே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்டறியும் பொருட்டு விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.