ரத்மலானை மற்றும் சென்னை நகரங்களுக்கிடையில் சர்வதேச விமான சேவையை துரிதமாக ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இந்திய விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் சேவைகளை ஆரம்பிப்பதற்கு இந்திய விமான சேவை நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைசார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும், சர்வதேச விமான நிறுவனங்களின் இலங்கைக்கான முகாமையாளர்களுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது மத்தல மற்றும் ரத்மலானை விமான நிலையங்களில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. புதிதாக விமான சேவைகளை ஆரம்பிக்கும்போது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதேவேளை குறித்த இரு விமான நிறுவனங்களிலிருந்தும், விமான சேவைகளை ஆரம்பிக்க முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையங்களின் ஓடுபாதையை பயன்படுத்துவதற்கான கட்டணத்தில் விலைக்கழிவை வழங்கவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. ஒருவருட காலத்திற்கு நிவாரண விலையில் எரிபொருள் வழங்குதல் உட்பட விமானங்களை தரையிறக்கும்போது மற்றும் தரித்து வைக்கும்போது அறவிடப்படும் கட்டணத்தை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.