அனுமதி பெறாத 800 மத்ரஸா பாடசாலைகள் நாட்டில் செயற்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்பு செயற்குழு தெரிவித்துள்ளது. குறித்த அனைத்து பாடசாலைகளையும் தேசிய கல்வி கட்டமைப்புக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென செயற்குழுவின் தலைவர் மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். 375 மத்ரஸா கல்லூரிகள் இதுவரை முஸ்லிம் விவகார திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் நாட்டின் அடிப்படை சட்டத்திற்கு எதிரான வகையிலேயே மத்ரஸா கல்லூரிகள் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டுக்குள் மத்ரஸா கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை நாட்டின் பொது கல்வி கட்டமைப்புக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருசில ஷரிஆ கல்லூரிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்பு செயற்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.