கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. பெருமளவில் கட்டுப்படுத்த முடியாமல் பூதாகரமாக எழும் தொற்று நோய் பரவலை, ‘பாண்டமிக்’ என வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை ‘பாண்டமிக்’ என அறிவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 78 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 27 ஆயிரத்து 323 பேர் குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.