குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெற்றுவருகிறது. விண்ணப்பங்களை அனுப்பியுள்ள சகலரதும் தகுதிகளை அடையாளம் கண்டு தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் தற்போது நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்றுவருகின்றன. இதற்கு முப்படையின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முடிந்தளவு விண்ணப்பதாரிகளின் கிராம சேவக பிரிவுகளுக்குள்ளேயே தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மிக விரைவில் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு நியமினம் வழங்கப்படும். குறித்த நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 29 ம் திகதிவரை இடம்பெறவுள்ளதாகவும் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளார்.