மின்னழுத்தியால் ஒன்பது வயது மகனுக்கு தாய் ஒருவர் சூடு வைத்த சம்பவம் ஒன்று காத்தான்குடியில் பதிவாகியுள்ளது. காத்தான்குடி இரண்டாம் குறிச்சி பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூடு வைக்கப்பட்ட சிறுவன் காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்காம் தரத்தில் கல்வி பயிலும் சிறுவன் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாசாலையின் அதிபரை சந்தித்து அது தொடர்பில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பாடசாலை அதிபரும் ஆசிரியர் ஒருவரும் சிறுவனின் வீட்டு சென்று சிறுவனை பார்வையிட முற்பட்ட போது முதலில் மறுத்த தாய் பின்னர் சிறுவனை பார்வையிட அனுமதித்துள்ளார்.
அங்கு பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அதிபரும் ஆசிரியரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டதோடு, மேலதிக சிசிச்சைகளுக்காக சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மாணவன் கடந்த சனிக்கிழமை குரான் மத்ரசாவிற்கு செல்லாது நித்திரையில் இருந்தமையினால் தாய் மின்னழுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.