மக்களை மையமாக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
சமுர்த்தி விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம் எனும் தொனிப்பொருளில் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமுர்த்தி மற்றும் விவசாய உத்தியோகத்தர்கள் 176 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ற வகையில் சகல அரச ஊழியர்களின் உரிமைகளை பெற்று கொடுக்க போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாய துறையின் இரண்டாவது சந்ததி உருவாகாமை ஒரு பிரச்சினையென்றும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாய துறையை கட்டியெழுப்புவதற்கு துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.