பாடசாலை வளாகத்திற்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் விநியோக சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலும், தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
பாடசாலை சுற்றாடலை கல்விக்கேற்ற சிறந்த பாதுகாப்பு பகுதியாக மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பான நாளை என்ற விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களமும், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய அதிகார சபையும், கல்வியமைச்சும் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.
அதற்கமைவாக பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0777 128 128 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு அருகாமையில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.