சீனாவின் வூஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்கள் வெற்றிகரமாக தொற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து இன்று வெளியேறிச்சென்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் வூஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கிருந்து எவருக்கும் வெளியே செல்லவோ பிரவேசிப்பதற்கோ தடை செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான நாடுகள் தமது நாட்டவர்களை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட 33 பேரை வூஹான் நகரில் இருந்து வெளியேற்ற இலங்கை அரசாங்கமும் உயர்ந்தபட்ச முயற்சிகளை மேற்கொண்டது.
ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் தொடர்பாக சீனா வைத்துள்ள தீவிர நம்பிக்கையின் பிரகாரம் இம்முயற்சிக்கு தீர்வு கிடைத்தது. இதற்கு அமைய இந்த 33 பேரையும் நாட்டுக்கு அழைத்துவர முடிந்தது. இதற்காக விசேட பயிற்சி பெற்ற ஊழியர் படையுடன் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குரிய யு.எல். 1423 எனும் விசேட விமானம் கடந்த 31ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. வூஹான் நகரில் இருந்த மாணவர்களுடன் இவ்விமானம் கடந்த முதலாம் திகதி மு.ப 7.42 மணியளவில் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இராணுவமும் விமான படையும் மேற்கொண்ட கூட்டு வேலைத்திட்டத்திற்கு அமைய மத்தல விமான நிலையத்தில் இவர்கள் விசேட பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர். பின்னர் இம்மாணவர்கள் தியத்தலாவ இராணுவ தொற்று நோயியல் மத்திய நிலையத்திற்கு விசேட பஸ் வண்டி மூலம் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.
சீனாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த மாணவர்களுக்கு உயர்ந்தபட்ச வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதற்கு அமைய 14 நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் வெற்றிகரமாக தொற்று நோயியல் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் எவருக்கும் இந்நோய் தொற்றுவதை தடுப்பதற்கு இலங்கை சுகாதார தரப்பினரும் இராணுவம் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள் மேற்கொண்ட முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கவை. இராணுவத்தின் தலைமையில் வெற்றிகரமான தொற்று நோயியல் சிகிச்சைகளை தொடர்ந்து இவர்கள் தியத்தலாவையில் இருந்து கொழும்பை நோக்கி இன்று மு.ப வெளியேறினர். இவர்கள் இன்றைய தினம் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளனர்.