வெற்றிகரமான இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தூதுக்குழு நாடு திரும்பியது. கடந்த ஏழாம் திகதி பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மஹிந்த ராஜபக்ஷ இந்த இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டதுடன், அங்கு அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் சம்பிரதாயபூர்வமான இராணுவம் அணிவகுப்பு மரியாதையும் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ராஷ்டபதி பவனில் இலங்கை பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் இந்தியாவில் உள்ள பல சமய ஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விசேட விமானம் மூலம் பிரதமர் இன்று பகல் 12.45 அளவில் தாயகம் திரும்பினார்.