யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் சிரேஷ்ட மாணவரொருவருக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கற்கை நெறிகளில் ஈடுபடவும், வளாகத்திற்குள் பிரவேசிக்கவும் மாணவனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்லைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவன் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் குறித்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் யாழ் பல்கலைக்கழத்தில் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட்சப் உரையாடல்கள் தொடர்பில் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாணவிகள் பாலியல் ரீதியான பகிடிவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
இதற்கமைய விசாரணை குழுவொன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினர், மாணவர்கள் சிலரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. பகிடிவதை விவகாரம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.ச்சாள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மேற்கொள்ளும் விசாரணைகளின் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வியமைச்சு கலந்துரையாடவுள்ளது. இதற்கமைய அடுத்த வாரம் உயர்கல்வியமைச்சின் குழுவொன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.