அனைத்து பல்கலைக்கழக கட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பதற்காக திறந்த கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக பிரச்சினைகள் மற்றும் மாணவ நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் உயர் கல்வியமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரட்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சங்கைக்குரிய ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் இதில் இணைந்திருந்தனர். மாணவர்களின் யோசனைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேநேரம் ருஹூனு பல்கலைக்கழகத்தின் பிரச்சினைகள் குறித்த சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ருஹூனு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் சமன் சந்தன மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.