பெரும்போக நெற் கொள்வனவிற்கென 3 ஆயிரத்து 830 மில்லியன் ரூபா நிதி தற்போது வரை நெற் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை சேமிப்பதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலை, உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு சொந்தமான களஞ்சியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறிய மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் வசமுள்ள களஞ்சியசாலையும் இதற்கென பயன்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2019 – 2020 பருவகால பெரும்போக அரச நெற் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோகிராம் நெல் 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகிறது. பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பிற்கமைய கொள்வனவு செய்யப்படும் உயர்ந்தபட்ச நெற் தொகை தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும்.
அதற்கமைய ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அந்த விவசாயியிடமிருந்து ஆயிரம் கிலோகிராம் நெல்லை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் நெற் செய்கை செய்யப்பட்டிருக்குமாயின் அவ்வாறான விவசாயிகளிடமிருந்து 3 ஆயிரம கிலோகிராம் நெல்லும் ஐந்து ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை செய்யப்பட்டிருந்தால், அந்த விவசாயிடமிருந்து 5 ஆயிரம் கிலோகிராம் நெல்லும் கொள்வனவு செய்யப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.