கட்டுநாயகக்க விமான நிலையத்தில் பயணிகளை தவிர அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுகாதார அமைச்சின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர சுயாதீன தொலைக்காட்சியின் ஹத்வெனி பெய நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் மதுபானங்களை அருந்துவதன் மூலம் இவ்வைரஸிலிருந்து விடுபட முடியுமென வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென கூறினார். சுகாதார அமைச்சின் அறிவித்தல்களுக்கு அமைய செயல்படுமாறும் அவர் குறிப்பிட்டார்.
“கடும் வெப்பநிலை காணப்படும் இடங்களில் இருக்கும் பட்சத்தில் இவ்வைரஸ் தொற்றாது என கூறப்பட்டது. அவ்வாறு இல்லாவிட்டால் மதுபானம் அருந்தினால் இந்த நிலைமை சீராகுமென சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்ப்பபட்டன. மதுபானத்தின் மூலம் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் இந்த உலகில் இருந்தால் அதனை காட்டச்சொல்லுங்கள். பிழையான ஒரு தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. மதுபானசாலை நடத்துவர்கள் இதன்மூலம் பயனடைய எண்ணியுள்ளார்கள். தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம். சரியான தகவல்கள் அறிவித்தல்கள் சுகாதார அமைச்சினூடாக நாம் வழங்குவோம். அதேபோன்று அண்மையில் வெளியான சில வீடியோக்களில் வீதிகளில் பயணிக்கும் நபர்கள், தீடிரென இந்த வைரஸ் காரணமாக மயங்கி விழுவதாக கூறப்பட்டிருந்தது. நாம் ஆராய்ந்த வகையில் அவ்வாறான ஒரு அறிகுறி இந்த நோயினால் ஏற்படாது.”
இதேநேரம் இவ்வைரஸை அடையாளம்காண்பதற்காக புதிய தொழில்நுட்பம் மற்றும் இரசாயன கூட வசதிகள் இலங்கையில் இருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.
“புதிய கொரோனா வைரஸ், புதியதொரு வைரஸாகும். இது தொடர்பான இராசயன கூட பரிசோதனைகளும் புதிதாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மரபணுக்களை உள்ளடக்கிய இப்பரிசோதனை நடைமுறைகள் தற்போது இலங்கையிலும் புனேவிலுமே உள்ளன. புதிய கொரோனா வைரஸினை இலங்கையில் வைத்தே உறுதி செய்து கொள்ள எம்மால் முடியும். இவ்வாறான இன்புளுவென்சா வைரஸ் மற்றும் சுவாச கோளாறுகள் ஆட்கொல்லி நோயாக மாற்றம் பெற்று அது, சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார் அதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோரையே அதிகளவில் பாதிக்கும். இந்நோயினால் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்தும் பொறுப்பை சுகாதார துறையினர் மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களுக்குரிய பாதுகாப்பான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு செய்து கொடுத்துள்ளது. இதனால் காரணமாக இந்நோய் பரவுவது தற்போது கட்டுப்படுத்தப்படடுள்ளது.”
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதும் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதுதொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார்.
“காய்ச்சல், சலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏதாவது தென்படும் சந்தர்ப்பத்தில், அவர்கள் தங்களது பிரயாணங்களை கைவிட்டு நோய் குணமாகும் வரை ஓய்வில் இருக்கவேண்டும். அவருக்கு ஏதாவது ஒரு சந்தர்பத்தில் பொது இடங்களுக்கு செல்ல தேவைப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் முக கவசத்தை அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறானவர்களுக்கு தும்மல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தூய துணியொன்றை கொண்டு மறைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வைரஸ் கிருமிகள் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.”