அசர்பய்ஜானில் துர்திஷ்டவசமான சம்பவத்திற்கு இலக்காகி உயிரிழந்த 3 மாணவிகளின் சடலங்கள் அவர்களது வீடுகளுக்கு எடுத்துவரப்பட்டன. நேற்று முற்பகல் வேளையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட சடலங்கள் குறித்த மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அசர்பய்ஜான் மேற்கு கெஸ்பியன் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அலங்கார ஆக்க பாடநெறியை தொடர்வதற்காக 3 இலங்கை மாணவிகள் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் ஆவர். மல்ஷா சந்தீபனி மற்றும் தாரகி அமாயா என்ற சகோதரிகள் இருவரின் சடலங்கள் பிலியந்தலை போகுந்துர மஹவத்த பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேற்றிரவு எடுத்துவரப்பட்டன.
சம்பவத்தில் உயிரிழந்த கடுவெல பஹலபோமிரிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட அமோத்யா மதுஹங்சி ஜயகொடி என்பவரின் சடலமும் அவரது வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது. இறுதி கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை இஹல போமிரிய பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.