பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார். வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவுடன் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்ல வேண்டுமென நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு ஏற்ப அவர் இன்று அங்கு சென்றார்.
கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி முதல் 18 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்த ராஜித சேனாரத்ன நேற்றிரவு அங்கிருந்து வெளியேறினார். ராஜித சேனாரத்ன சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் சம்பவம் தொடர்பாக கைது செய்வதற்கு பொலிஸாரால் தேடப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும் அவரை வைத்தியசாலையிலிருந்து வெளியேற அவரது மருத்துவர் இடமளிக்காமையினால் அவர் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்தார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ராஜித சேனாரத்னவுக்கு பிணைவழங்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி சட்டமா அதிபர் மீள் சீர்திருத்த மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அம்மனு எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்ய விடுவிக்கப்பட்ட உத்தரவை சீர்த்திருத்தி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவுக்கு அடுத்த வழக்கு தவணையில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நேற்று கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்தது. நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய ராஜித சேனாரட்ன இன்று மு.ப குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகினார். சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலம் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.