முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். இருதய நோய் காரணமாக கடந்த 26ம் திகதி அவர் நாரஹேன்பிட்டயிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் பணிப்புரைக்கமைய சிகிச்சைகளின் பின்னர் இன்று அதிகாலை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக தெரியவருகிறது.
சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு கடந்த மாதம் 24ம் திகதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர் காணாமல்போயிருந்தார். பின்னர் அவர் நாரஹேன்பிட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் வைத்தியசாலைக்கு சென்ற நீதிபதி ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார். அதன் பின்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது ராஜித சேனாரத்னவுக்க பிணை வழங்கப்பட்டது.
இதேவேளை ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.