பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் செல்லிட தொலைபேசி உரையாடல் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் ஒலிபதிவுகள் ஊடகங்கள் ஊடாக ஒலிபரப்பப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ் ஒலி பதிவு தொடர்பாக பொலிஸ் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்பனவற்றிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இக்குரல் பதிவு தொடர்பாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். ஒலிபதிவு தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு முன்வைத்தது.
இதன் போது கொழும்பு குற்றப்புலனாய்வு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்ட மஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் தடையுத்தரவொன்று பிறப்பித்தது.