ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படை விமானத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 சந்தர்ப்பங்களில் ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் திட்டமிடல் இடம்பெறும் முகாமை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லையென பிபிசி தெரிவித்துள்ளது. அமெரிக்க தாக்குதலில் ஈரான் புரட்சி படையணி தலைவர் காஷிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து அதற்கான பழிவாங்கும் படலம் ஆரம்பமாகுமென ஈரான் எச்சரித்திருந்தது.
இதேவேளை ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளை வெளியேற வேண்டுமென ஈராக் பாராளுமன்றம் பிரேரணையொன்றையும் நிறைவேற்றியிருந்தது. எனினும் அவ்வாறு இராணுவத்தினரை வெளியேற்ற முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதேவேளை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீபுக்கு அமெரிக்கா செல்ல வீசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நாளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கா செல்ல வீசா கோரியுள்ள நிலையில் அவரின் வருகைக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவுக்கு ஒருவர் வந்து உண்மையை அம்பலப்படுத்துவது தொடர்பில் அவர்கள் பயப்படுவதாக குறிப்பிட்டார்.