பாடசாலை மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை உஹன செனரத்புர கிராமிய வைத்தியசாலையின், வைத்தியரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபெற தேவையென தெரிவித்து, குறித்த சிறுமிகள் வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ள சென்ற சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்திய பரிசோதனை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த வைத்தியர் தங்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக நான்கு சிறுமிகளும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நால்வர் வைத்திய பரிசோதனைக்காக தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட வைத்தியரை இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.