8வது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகைதந்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவின் வருகை இடம்பெற்றது. ஜனாதிபதிக்கு சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்பு வழங்கினர். அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. கோட்டை ஆனந்த பாலிகா வித்தியாலய மாணவிகள் மங்கள கீதத்தை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி, சபாநாயகரால் பாராளுமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய சிம்மாசன உரையை நிகழ்த்தினார்.
மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு மக்களுக்கு சேவையாற்றுவதே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். தனது கொள்கை பிரகடனத்தில் குறித்த விடயத்திற்கு முன்னிலை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொதுமக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு பொதுமக்களுக்கு சேவையாற்றுவதே. தமக்கு கிடைத்துள்ள பொறுப்பை வரப்பிரசாதமல்ல. தமக்கான கடமையென கருதி செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்ய சரியான நோக்கம் மற்றும் திட்டம் அவசியம். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுபீட்சமான இலக்கு எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பொதுமக்களின் கருத்துக்கள், துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள், அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் தனது கொள்கை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு சுபீட்சமான இலக்கு திட்டம் உருவாக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்கமைய பொதுமக்களுக்கு சுமையாக இருந்த வரி குறைக்கப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையும் செயற்திறனும் மிக்க நிர்வாக முறையை ஏற்படுத்துதல், தேவையற்ற அரச செலவுகளை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமது கொள்கை பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறவேண்டிய முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கிடையில் தொடர்பாடலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு வலையமைப்பு மறுசீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாய்நாட்டை மோசடியாளர்களிடமிருந்து காப்பாற்றி பாதுகாப்பான நாடாக மாற்றியமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய சௌபாக்கியம் மிக்க நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே மக்கள் வாக்கினை வழங்கியுள்ளனர். இனவாதத்தை மையப்படுத்திய அரசியல் நிகழ்ச்சி நிரலை மக்கள் நிராகரித்துள்ளனர். தொடர்ந்தும் நாட்டில் தம்மை மன்னர்களாக காட்டி நாட்டு அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாதென மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்தகைய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுபீட்சமான இலக்கில் பொதுமக்களை கேந்திரமாக கொண்ட பொருளாதார கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னேறுவதற்காக முயற்சிக்கும் அனைவருக்கும் சரியான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். மக்கள் சேவைக்கென அர்;ப்பணிப்புடன் சிறப்பாக செயற்படக்கூடிய அரச சேவையை உறுதிப்படுத்தல், தேசிய கமத்தொழிலாளர்களை பாதுகாத்தல் என்பன சுபீட்சமான இலக்கின் நோக்கமாகும். மக்களை கேந்திரமாகக்கொண்ட பொருளாதாரத்தை வெற்றிகரமாக ஸ்தாபிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிலிருந்து கீழ்மட்ட அதிகாரிகள் வரை நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் தெளிவுபடுத்தப்படவேண்டும். அவர்கள் தமது அரச சேவையை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். தற்போது நாட்டில் காணப்படும் டிப்ளோமா மட்டத்திலான பாடத்திட்டங்களை பட்டப்படிப்பு மட்டத்திற்கு கொண்டுசெல்வது அவசியமாகும். இதன் ஆரம்பகட்டமாக ஆசிரியர் கலாசாலை மற்றும் தாதியர் கலாசாலைகளை பட்டப்படிப்பு மட்டத்திற்கு கொண்டுசெல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதேவேளை தாதியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மூன்று வருடகால டிப்ளோமாவை நான்கு வருட பட்டப்படிப்பாக உயரத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, சுயாதீனத்தன்மை, ஒருமைப்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்காக தற்போது காணப்படும் அரசியல் யாப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும். விகிதாசார தேர்தலில் காணப்படும் சாதக தன்மைகளை பாதுகாத்து பாராளுமன்றத்தின் நிலையான தன்மை மற்றும் மக்களின் நேரடி பிரதிநிதித்துவம் போன்றவற்றை பாதுகாப்பதற்காக தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். அடிப்படைவாதிகளின் அழுத்தம் காரணமாக தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாத சூழல் பாராளுமன்றத்தில் காணப்படுகிறது. இதனால் நிலையற்ற பாராளுமன்றம் நாட்டுக்கு பொருத்தமற்றது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய பலம்வாய்ந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் சுயாதீனமான நீதித்துறையை உருவாக்க அரசியல் யாப்பில் மாற்றம் செய்யவேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/JtT3Msd6Cc8″]