அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் நாட்டுக்கு வருகைதருவதற்கென மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருகைதர வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 31ம் திகதி வரை அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலர் முன்வைத்த கோரிக்கைக்கமைய தற்போது மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 10 பேர் வரை நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது. எஞ்சிய 12 பேரும் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் நாடு திரும்புவார்களென எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.