8வது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையுடன் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரத்தின் கீழ் கடந்த 2ம் திகதி அதிவிசேட வர்த்தமானியொன்றினூடாக பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறைவுசெய்யும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டார். அதற்கமைய 8வது பாராளுமன்றின் 4வது அமர்வு இன்று ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காலை 10 மணிக்கு ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை நிகழ்த்திய பின்னர் பிற்பகல் ஒரு மணிவரை சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளன. பின்னர் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் பிற்பகல் ஒரு மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. முதற்பணியாக எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயரை அறிவிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் அவைத்தலைவர், ஆளும் கட்சி பிரதம கொறடா, எதிர்க்கட்சி பிரதம கொறடா ஆகயோர் நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடா தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று தீர்மானிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் குழு கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போதே இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.