சுடுநீர் கொட்டி உடல் முழுதும் எரி காயங்களுக்குள்ளான ஒரு வயதான ஆண் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த 20ம் திகதி குழந்தைக்கு பால் கரைப்பதற்கு சுடுநீரை தயாரித்த குழந்தையின் தாய் அதனை மேசையின் விளிம்பில் வைத்துவிட்டு பால்மாவை எடுப்பதற்கு சென்றுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் குழந்தை மேசை விரிப்பை இழுத்த நிலையில் மேசையின் விளிம்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்த சுடுநீர் குழந்தையின் மேல் கொட்டியுள்ளது. இதில் காயங்களுக்குள்ளான ஒரு வயதான ஆண் குழந்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.