முன்னாள் அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கடந்த 18ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளிலும் 25 ஆயிரம் ரூபா பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை 2016ம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துஷிதகுமார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 6ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சலா த சில்வா உத்தரவிட்டார். மேலும் எதிர்வரும் 26ம் திகதி குறித்த நபரிடம் சிறைச்சாலைக்குள் வைத்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.