பிரித்தானிய பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இலங்கை நேரப்படி நண்பகல் 12.30 க்கு வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. 5 வருட காலப்பகுதியில் பிரித்தானியாவில் இடம்பெறும் 3 வது பொதுத் தேர்தல் இதுவாகும். 650 மத்தியநிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. மத்திய நிலையங்கள் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இம்முறை பொதுத்;தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பெறுபேறுகள் நாளைய தினமளவில் வெளியிடப்படுமென அந்நாட்டு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. தேர்தலின் ஊடாக 650 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவர் போட்டியிடுகின்றனர். பிரித்தானிய ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகுவதற்கான பிரக்சீட் செயற்பாடு தொடர்பில் காணப்பட்ட தீர்க்கமற்ற நிலையானது பொதுத் தேர்தல் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.