கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைகின்றன. பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் அமைதியான முறையில் வீடுகளை நோக்கி செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மாணவர்களுக்கு அறிவித்துள்ளார்.
கலகம் ஏற்படுத்தும் வகையிலோ, அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ செயற்படுவது தண்டனைக்குரிய குற்றமென அவர் குறிப்பிட்டார். அவ்வாறு செயற்படும் மாணவர்களின் பெறுபேறுகளை இரத்து செய்யும் அதிகாரம் காணப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் மாணவர்களை கண்காணிப்பதற்கு நாடுதழுவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல பரீட்சை நிலையங்களுக்கு அருகில் பொலிசார் நடமாடும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 26 ம் திகதி ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ம் திகதி ஆரம்பமாகும் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜனவரி மாதம் நான்காம் திகதி வரை இடம்பெறும். ஜனவரி மாதம் 18 ம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜனவரி 26 வரை இடம்பெறவுள்ளது. 82 மத்திய நிலையங்களில் இடம்பெறும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் 35 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். அவர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் எதிர்வரும் 18 ம் மற்றும் 19 ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.