நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தர்மபுரம் பகுதியில் பாலமொன்று உடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்றையதினம் தர்மபுரம் மகா வித்தியாலத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். உடனடியாக பரீட்சை மண்டபம் மேல்மாடிக்கு மாற்றப்பட்டது. தற்போது மாணவர்கள் அசௌகரியமின்றி பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இரணைமடு குளம் வான்பாயும் மட்டத்தை அடைந்ததால் அதன் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக வவுனியாவிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 180 குடும்பங்களை சேர்ந்த 552 பேர் மூன்று நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேணைள திருகோணமலை மாவட்டத்திலும் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூதூர் பிரதேசத்தின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்திலும் தொடர்ச்சியான மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கல்ஓயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து 342 குடும்பங்களை சேர்ந்த 13 ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார். பொத்துவில், திருக்கோவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை உட்பட தாழ்நில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டிலுள்ள 75 நீர்த்தேக்கங்களில் 29 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்தார். அனுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை, மாத்தளை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன தெரிவித்தார்.
இதேவேளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க கூட்டு நிவாரண செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நிவாரண உதவிகளை வழங்க தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரண உதவிகள் வழங்கப்படும். தேவையேற்படின் மேலதிக நிதியை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.