புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் எஸ்.ஜயஷங்கர் தெரிவித்தார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.
இருநாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை குறித்த ஜனாதிபதியின் வருகை மேலும் பலப்படுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு அனுகூலம்மிக்க புதிய நோக்குடன் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பேணப்பட வேண்டும். இதுவே பிரதமர் நரேந்திர மோதியின் நோக்கமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்திய பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.