ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் நடவடிக்கைகளை நிறைவு செய்து அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலையை நிர்மாணிக்கும் போது 33.9 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவே அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது தரப்பினர் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் யாப்பிற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .இதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் அல்லது சிவில் வழக்கொன்றை முன்னெடுத்துச் செல்ல முடியாதென தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லையெனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு கடவுச்சீட்டையும் பிணையாளர்களையும் விடுதலை செய்வதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் தொடர்பான நிலைப்பாட்டை அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படுமென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.