மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மேலும் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நாளை மக்களின் உரிமைக்கு வழங்கிவைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அம்பன் புதிய நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 8 அரச நிறுவனங்கள் நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளன. மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்தால் பாதிப்படைந்த கோன்கஹவெல நகரிலிருந்த அரச நிறுவனங்களே இவ்வாறு அம்பன் புதிய நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக வேலைத்திட்ட பணிப்பாளர் டி.பி.விஜயரத்ன தெரிவித்தார். வனஜீவராசிகள் காரியாலயம், பிரதேச வைத்தியசாலை, கமநல சேவை மத்திய நிலையம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் பலவும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டத்திற்கென ஆயிரத்து 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதேவேளை மொரகஹகந்த களுகங்கை வேலைத்திட்டத்தினூடாக ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் நன்மையடைவதாக மஹாவலி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.