நிலவும் சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு – காவத்தமுனை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 21 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 894 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இம்மாதம் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இம்மாதத்தில் 4 ஆயிரத்து 155 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 72 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. மழையுடனான வானிலையால் நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள், தமது சுற்றுசூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும், சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.