இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் நோக்கிலேயே இவ்வுடன்படிக்கை கைச்சாத்தானது.
இலங்கை மன்ற கல்லூரியில் இவ்வொப்பந்தம் இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இவ்வுடன்படிக்கையானது இலங்கையில் உள்ள பல்வேறு இடங்களோடு மலையக மக்களும் கைக்கோர்க்ககூடிய சிறந்தவொரு உறவு பாலமாக அமைவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருகட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் பலரும் இதன்போது இணைந்திருந்தனர்.