முச்சக்கர வண்டியொன்றும், பஸ்சொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர். பத்தனை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் இன்று காலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிவந்த முற்சக்கரவண்டியொன்றும், பாடசாலை சேவை பஸ்சொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் முற்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் மூவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் பலத்த காயங்களுக்குள்ளான முற்சக்கரவண்டி சாரதி, மேலதிக சிகிச்சைகளுக்கென நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பஸ் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணமென பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.