ஈரான் தொடர்பில் உலக நாடுகள் உரிய தீர்மானம் எடுக்காவிடின் எண்ணெய் விலை எதிர்ப்பார்க்க முடியாதளவு அதிகரிக்குமென சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்குமிடையிலான யுத்தம் உலக பொருளாதாரத்தை முற்றிலும் பாதிக்குமெனவும் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சவுதி அரேபியாவிலுள்ள மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் மீது ஹவுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு பக்கபலமாக ஈரான் செயற்ப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா உட்பட உலக நாடுகள் பல குற்றம் சுமத்தின. இந்நிலையில் எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலையடுத்து, உலக சந்தையில் எரிபொருளின் விலையில் பாரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.
இதேவேளை கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்கான பொறுப்பையும் தாம் ஏற்பதாக குறித்த உரையின் போது சவுதியின் முடிக்குரிய இளவரசர் தெரிவித்துள்ளார். எனினும் அவரை கொலை செய்வதற்கு தனிப்பட்ட முறையில் உத்தரவு பிறப்பித்த குற்றச்சாட்டை இளவரசர் மொஹமட் பின் சல்மான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.