ஹபரணை – கும்பிகுளம் வனப்பகுதியில் யானைகள் உயிரிழந்தமை குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹிரிவடுன்ன பகுதியில் இன்றைய தினமும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இராணுவம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ச்சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் செயற்பட்ட விதம், அதன்மூலம் கிடைக்கப்பெற்ற பிரதிபலன்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கெகிராவ நீதவான் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றம் விடுக்கும் தீர்ப்புக்கமைய எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த நிலையில் மேலும் யானைகளின் உடல்கள் கிடக்கின்றனவா என்பதை அறியவும், யானைகளின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கிலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனப்பகுதியில் விசப்பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்ற கோணத்தில் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யானைகளைத் தவிர வேறு விலங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனவா என்பது குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.