எவன்கார்ட் வழக்கிலிருந்து கோட்டப்பாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலையாகியுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர்களை விடுதலை செய்வதாக நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார். எவன்கார்ட் வழக்கிலிருந்து கோட்டப்பாய ராஜகபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக கடந்த 12 ம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனினும் அதுதொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால் வழக்கு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு பிரதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆயுத களுஞ்சிய மொன்றை நடத்திசெல்ல அனுமதி வழங்கப்பட்டமையால் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.