ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதி தலைவர் சஜிப் பிரேமதாச ஆகியோருக்கிடையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னெடுக்கவேண்டிய வழிவகைகள் மற்றும் உபாயங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலுக்காக பரந்த கூட்டமைப்பு அமைப்பது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வேட்பாளர் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லையென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள் மூவரும் பங்கெடுத்துள்ளனர்.
நேற்று இரவு பேச்சுவார்த்தை நிறைவுபெறும்போது, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்கமைய இன்று மதியம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இவ்விருவருக்குமிடையில் மீண்டுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதிசெய்துள்ளது.