யெமனில் இராணுவ தளங்களை குறிவைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சடா மாகாணத்துக்கு உள்பட்ட கடாப் பகுதியில் உள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் பின்னர் சில படைவீரர்களை ஹவூதி கிளர்ச்சியாளர்கள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்து சென்றுள்ளதாகவும் ஏமன் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஹவூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது ஏற்பட்ட மோதல்களில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரசப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவளித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.