கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மூடப்பட்டிருந்த இந்தியாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையம் மீண்டும் பயணிகளின் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முதலாவது விமானம் இன்று காலை கொச்சின் பயணமானது.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் யு எல் 166 என்ற இலக்க விமானம், கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 9:10 இற்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றதுடன் இதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவை ஏ330-243 என்ற விமான ரகத்தை சேர்ந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இந்த விமான சேவையை கடந்த 9 ஆம் திகதி காலை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இடைநிறுத்தவதற்கு ஸ்ரீ லங்கன் விமான சேவை அதிகாரிகளும் கொச்சின் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் வாரத்தில் ஒவ்வொரு நாளும் இந்த விமானத்தை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஸ்ரீ லங்கன் விமான சேவை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைவாக காலை 9 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செல்லும் விமானம் அன்றைய தினம் காலை 10:15 இற்கு கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும். இதன் பின்னர் இந்த விமானம் அன்றைய தினம் மாலை 4:10 இற்கு கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 5:20 இற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும்.