2016ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலும் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொலன்னாவ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மதிப்பீடு செய்யப்படாத வீடுகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு 8 ஆயிரத்து 879 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு வழங்குவதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை இலங்கையில் தன்னார்வ சேவை தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறுவர் பாதுகாப்பு, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட விடயங்களும் இதில் உள்ளடக்கம். அதற்கமைய தேசிய கொள்கைக்கு பொருத்தமான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.