சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையின் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சைட்டம் தனியார் வைத்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மூவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு இத்தீர்ப்பை வழங்கினர்.
சைட்டம் நிறுவனத்தில் வைத்தியர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதாகவும் மனுதாரர்கள் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.
அவ்வாறு இருக்கையில் இலங்கை வைத்திய சபை தான்தோன்றித்தனமாக தம்மை பதிவுசெய்வதை புறக்கணித்து வருவதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று ஆராய்ந்த உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அதற்கமைய எதிர்வரும் மூன்று வார காலப்பகுதிக்குள் சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 82 மாணவர்களை இலங்கை மருத்துவ சபையின் மருத்துவ பயிற்சியாளர்களாக பதிவுசெய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.