கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் நிறைவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இதற்கமைய மேலதிக வகுப்புக்கள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை விதிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 பரீட்சார்த்திகளும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றனர். மொத்தமாக மூன்று இலட்சத்து 38 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைகளில் தேற்றுகின்றனர். இரண்டாயிரத்து 176 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இணைப்பு அலுவலகங்கள் 215 அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் புதன் கிழமை 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 39 ஆயிரத்து 369 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதுகின்றனர். இரண்டாயிரத்து 196 மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இணைப்பு அலுவலகங்கள் 498 அமைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.