செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென 500 மில்லியன் ரூபா திறைசேரியிடமிருந்து விவசாய பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சபையின் பணிப்பாளர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வரட்சியினால் விவசாய நிலங்களை இழந்தவர்களுக்கும், யானைகளின் அட்டகாசித்தினால் செய்கை நிலங்களை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. வெள்ளத்தினால் நிலங்களை இழந்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். எனினும் வரட்சியினால் நட்டத்தை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2 ம் திகதி அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் , 3 ம் திகதி பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கும் , 4 ம் திகதி அம்பாரை மாவட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் சேனா படைப்புழுவினால் செய்கை நிலங்களை இழந்தவர்களுக்கு இம்மாதம் 31 ம் திகதிக்குள் இழப்பீடு வழங்கப்படுமென விவசாய பாதுகாப்பு சபையின் பணிப்பாளர் பண்டுக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.