எதிர்கட்சிகளின் நோக்கம் பொது மக்களை ஏமாற்றுவதே என அமைச்சர் திலக் மாரப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்றம் ஆரம்பமாகியது. இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்தவின் கேள்விக்கு பதிலளித்த பதில் அமைச்சர் புத்திக பத்திரன எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் நெசவு கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரணைகள் முன்வைக்கப்படுமென தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் திலக் மாரப்பன, ஐநா விசேட பிரதிநிதி தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். ஐநா பிரதிநிதிகளுடனான சந்திப்பு மிகவும் பகிரங்க தன்மையுடன் இடம்பெற்றதாக இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர், நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகளை சந்திப்பதற்கான நேரம் ஒதுககப்பட்டுள்ளதாகவும் அதற்கான இணைப்பு நடவடிக்கைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் நீதிமன்றத்திற்கு எவ்வித அவமதிப்போ, வழக்குகளில் தலையீடோ இருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது இது முதல் முறை அல்லவெனவும் இதற்கு முன்னர் 8 முறை இவ்வாறு இடம்பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்கட்சிகள் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.