டோக்லாம் விவகாரத்தின் போது, இந்தியா மற்றும் சீனாவுக்கிடையே உருவாகிய சாதகமான நிலைமையால், அப்பகுதியில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது என, சீன இராணுவம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே, வட கிழக்கு மாநிலங்களை ஒட்டிய எல்லையில், 3,488 கி.மீ பகுதி பிரச்னைக்கு உரியதாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த அந்த பகுதியை, சீனா உரிமை கொண்டாடுகிறது. இதனால், 2017ல் இந்தியா மற்றும் சீன இராணுவத்தினர் நேரடி மோதலில் ஈடுபடக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்திய வீரர்கள் அளித்த நெருக்கடியை அடுத்து டோக்லாம் பகுதியில் சாலை கட்டும் பணியை சீன ராணுவம் நிறுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில், டோக்லாம் பிரச்சினை பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த சில மாதங்களில், சீனாவின் வூஹான் நகரில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கலந்துரையாடியதை அடுத்து, அமைதி ஏற்பட்டது. இந்நிலையில், ‘இந்த புதிய சகாப்தத்தில், சீனாவின் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பில், சீன இராணுவம், வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘டோக்லாம் விவகாரத்தின் போது, அந்த பகுதியில் அமைதி நிலவவும், அந்த பகுதியின் ஸ்திரத்தன்மையை பராமரிக்கவும், சாதகமான சூழ்நிலையை சீனா உருவாக்கியது’ என, தெரிவித்துள்ளது.