ஆயிரத்து 918 புதிய அதிபர்கள் துரிதமாக நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தின் பிரதிலாபங்களை வழங்கும் வேலைத்திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
ஆயிரத்து 918 மூன்றாம் தர அதிபர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காகவே புதிய அதிபர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 10 ம் திகதி நடைபெற்ற அதிபர்களை இணைத்துக்கொள்ளும் போட்டிப்பரீட்சையில் கூடிய புள்ளிகளைப்பெற்ற விண்ணப்பதாரிகள் இதற்கென தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இம்மாத இறுதிமுதல் இதற்கான நேர்முக பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய போட்டிப்பரீட்சையில் உயர்ந்தபட்ச புள்ளிகளைப்பெற்ற 3 ஆயிரத்து 881 பேர் நேர்முகபரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை இலவச கல்வியை மேலும் விஸ்த்தரித்து மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டத்தின் கீழ் 11 ஆயிரத்து 740 பேருக்கு பிரதிலாபங்கள் வழங்கப்பட்டுள்ளன. 533 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் இதற்கென செலவிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.