தற்போதய அரசாங்கம் கல்வியில பாரிய புரட்சியொன்றை ஏற்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டங்கள் பல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டதுடன் மேலும் பல திட்டங்களையும் அங்குராரப்பணம் செய்து வைத்தார். பாரிய ருவண் வெல்ல, கஹன்தொட்ட குடிநீர் திட்டமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் பெருந்திரளானோருக்கு குடிநீர் வசதிகிடைக்கின்றது. பல வருடங்களாக இப்பிரதேச மக்கள் முகம்கொடுத்த குடிநீர் பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வுகிடைக்கின்றது. இதேவேளை ருவன்வெல்ல , கஹன்வெல்ல சுலைமானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடதொகுதியையும் பிரதமர திறந்து வைத்தார். அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 2 மாடிகளை கொண்டதாக இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பிரதமர் இங்கு உரையாற்றுகையில் :
“2015 ம் ஆண்டு நான் வாக்குறுதியளித்த விதத்தில் ருவன்வெல்ல குடிநீர் திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்தேன். அத்துடன் சுலைமான் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தோம். அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் இக்கட்டிடம் வழங்கப்பட்டது. சுலைமானியா மகாவித்தியாலயத்திற்கு அடுத்த வருடம் 100 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. நிர்வாக கட்டிடத்தையும் தொழிநுட்ப கட்டிடதொகுதியும் பெற்றுத்தருமாறு இங்கு வருகை தந்து கோரிக்கை விடுத்தனர். எனக்கு தொடர்புபட்ட ஊரான இப்பாடசாலைக்கு இவ்விரு கட்டங்களையும் பெற்றுத்தருவதாக உறுதியளிக்கிறேன். அரசாங்கம் என்ற வகையில் பாரிய நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ளோம். அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது பாரியதொரு வேலைத்திட்டமாகும். இவை அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு மேலும் 5 வருடங்களாவது செல்லும். நேற்யை தினம் 250 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. அடுத்தமாதமளவில் 500 கட்டடங்களை திறந்து வைக்க உத்தேசித்துள்ளோம். இவ்வாறே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி 21 ம் நூற்றாண்டில் புரட்சியொனறை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம். தேசிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு டெப் கணணிகள் இவ்வருடத்திற்குள் வழங்கப்படும். 21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வியை உங்கள் அனைவருக்கும் பெற்றுத்தருவோம்.” என தெரிவித்தார்
ருவன்வெல்ல பஸ்நிலையமும் விளையாட்டு மைதான சுற்றுவட்டப் பாதையும் காபட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இப்பணிகளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.