கதிர்காம கந்தன் ஆலய உட்சவம் வசந்தம் மற்றும் ITN ஊடக வலையமைப்பின் ஊடாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. நேற்று முன்தினம் ஆரம்பமாகிய வருடாந்த ஆடிவேல் உட்சவம் எதிர்வரும் 17ம் திகதி வரை தொடர்ச்சியாக 14 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாள் இரவும் பெரஹர வீதி ஊர்வலம் இடம்பெறவுள்ளது. இறுதி ரந்தோலி பெரஹரா இம்மாதம் 16 ஆம் திகதி வீதி உலா வரவுள்ளது.
இப்பெரஹர பாரம்பரிய கலை கலாசார அம்சங்களை உள்ளடக்கியதாக இடம்பெறும். எதிர்வரும் 17 ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் வரலாற்று சிறப்புமிக்க விழா நிறைவுபெறவுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலன்கருதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகளுடன் பல்வேறு சுகாதார நல திட்டங்களும் இதனையொட்டி முன்னெடுக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு கடமைகளில் பொலிஸ் இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்விழாவில் நாடெங்கிலுமிருந்து கலந்து கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி விசேட பஸ்கள் மற்றும் ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.